ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஹமில்டன் கால்வாய்


போர்ட்டிங் போகனும்னு ஆசையா இருந்தா நுவரெலியா போகனும் அல்லது காலிக்குத்தான் போகனும். இப்படி தலைநகரில்  பலரும் சொல்வதை
கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் ஒரு மணிநேரத்திற்குள் அதுவும் தலைநகருக்குள் போர்ட்டிங் போவதற்கும் விடுமுறை நேரங்களை நிம்மதியாக கழிப்பதற்கும் சில இடங்கள் இருக்கின்றது. விடுமுறைக்காக பல ஆயிரங்கள் பணம் செலவழிக்காமல், பயணக்களைப்பு இல்லாமல் போய்வரக் கூடிய இடம் தான் ஹமில்டன். கொழும்பு -15 மட்டக்குளியவில் இருந்து வத்தளை நோக்கி செல்லும் போது நீர்க்கொழும்பு, வத்தளை  பாதைகளை பிரிக்கும் சந்தியில் பாதை ஓரத்திலேயே அமைந்துள்ளது ஹமில்டன் கால்வாய்.
வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் கடதாசி பூக்கள் கரையோரங்களை அலங்கரிக்க அழகாய் அமைந்துள்ளது ஹமில்டன் கால்வாய். வாயிலிலேயே புனித 
அந்தோனியாரின் சிலையும் அருகே ஆலமரத்தடையில் சாந்தமான புத்தபெருமான் சிலையும் காட்சிதருகிறது.


மரங்களின் நிழலில் இளைப்பாறும்வண்ணம் இருக்கைகள் ஹமில்டன் கால்வாயின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் நீண்ட தொங்கு பாலம் இருகரைகளையும் இணைக்கிறது. பாலம் வழியே சென்றால் ஹமில்டனின் மொத்த அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.
சிறுவர்களை கவரும் வண்ணம் குறைந்த செலவில்  பாதுகாப்பான முறையில் போர்ட்டிங் சேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக மாலை வேளைகளில் இந்த இடம் களைக்கட்டி இருக்கும். அழகான மின்விளக்கு மின்னும் ஹமில் டனில் சிறுவர்கள் விளையாட, நடந்துத் திரிவதற்கு நல்லதோர் இடமாகவும் பெரியவர்கள் இளைப்பாறிச்செல்ல சிறந்த இடம் ஆகும். 
அதிகம் செலவு செய்யாமல் வித்தியா சமாக உணவருந்தும் இடங்களும் இங்கு அமைக்கப் பட்டுள்ளன. போர்ட்டுக்களில் ஹோட்டல்கள் போன்று அமைக்கப்பட்டு அதில் உணவுகளும் குளிர்ப்பானங்களும் வாங்கிக்கொள்ளலாம்.
நீங்கள் உணவுக்கான ஓடரை கொடுத்துவிட்டு போட்டினுள் இருந்தவாறே புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சுடச்சுட உணவுகளை தயாரித்து கொடுத்து விடுகிறார்கள். இயற்கையை இரசித்தவாறு நீரில் மிதந்துக்கொண்டே உணவருந் தலாம்.
அல்லது ஹமில்டனை சுற்றிலும் சின்னச் சின்ன கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. கைஏந்தி பவன்களும்  அணிவகுத்து நிற்கின்றன. இவற்றில் கிராமத்து சாயலில் அமைந்த உணவுகளும் உள்ளமை சிறப்பம்சமாகும். இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளின் ஓரங்களில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளமையால் நடந்து திரிய வேண்டிய அவசியமில்லை.
கைக்கு எட்டிய தூரத்தில் ஐஸ்கிறீம், பஞ்சுமிட்டாய்களை வாங்கி சுவைத்தபடி அழகாய் பொழுதைக் கழிக்கலாம். ஹமில்டன்  அழகு மட்டுமல்லாது பாதுகாப்பும் மிக்க ஒரு இடம் என்றுதான் சொல்லவேண்டும்.  இங்கு குப்பைகளை வீசுவதற்காக குப்பைத்தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் பாவனைக்காக நீர் குழாய்களும் உள்ளன. இத்தனையும் இலவசமாய்க் கிடைக்க இங்கு சென்று இயற்கையை இரசிப்பவர்கள் சூழலை அசுத்தப்படுத்துவது வருந்தத்தக்கது. பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கவரும் ஒவ்வொருவரும் பொது இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் மனதில்கொள்வது கட்டாயமாகும்.